பருத்திவீரனை பற்றி வித்தியாசமான படம், கிராமத்து மணம் வீசும் படம் என இரசிகர்கள் மத்தியில் பேசுப்படுகின்ற படம். ஆனால் இந்த படத்தில் ஒரு இரவுடியின் அற்ப வாழ்க்கையை இரசிக்கும்படி கொடுத்திருந்தாலும் அதில் செயற்கைத்தனங்களயும், கிராமத்து மக்களை எப்படி இழிவுப்படுத்துகிறது என எடுத்துரைக்கிறது, புதிய கலாச்சாரம் பத்திரிக்கையில் வெளியான பருத்தி வீரன் விமர்சனம். அவற்றில் இருந்து சில குறிப்புகள்.
வசூலில் வெற்றியடைந்திருக்கும் பருத்தி வீரனை மண்வாசனை கதை, அசலான பாத்திரங்கள், தெற்கத்தியப் பண்பாட்டைப் படம் பிடித்துக் காட்டும் காட்சிகள் என எல்லா அம்சங்களிலும் போற்றும் இரசிகர்கள் திரைப்படத்தின் இறுதியில் வரும் கற்பழிப்புக் காட்சிகள் குறித்து மட்டும் வருத்தப்படுகிறார்கள்.
சென்டிமென்டால் போட்டுத்தாக்கும் இந்த மலிவான உத்தியில் இரசிகர்களின் பிரச்சனையோ வேறு மாதிரி. முத்தழகு கூறுவது போல் அவர்கள் பருத்திவீரனின் முன்வினை அவளைச் சுட்டது என்று கருதவில்லை. மாறாக, ஒரு காதல் ஜோடி சேர முடியாமல் இரக்கமின்றிப் பிரிக்கப்பட்டதே அவர்களின் கவலை.
சித்தப்பா செவ்வாழையுடன் பருத்தி வீரன் செய்யும் குடி, கூத்து, ஆட்டம், பாட்டத்தை அவர்கள் பாவமாக கருதவில்லை. சொல்லப்போனால் பார்வையாளர்கள், குறிப்பாக ஆண்கள் அந்த கேளிக்கைகளில் மனதளவில் கலந்து கொள்கிறார்கள்.
காட்சிக்கு ஒரு நகைச்சுவை என செதுக்கித் தீட்டப்பட்ட திரைக்கதை பொதுவாக கலகலப்பாக செல்கிறது. பருத்திவீரனது வக்கிரங்கள் எவையும் பொது புத்திக்கு அதிர்ச்சி தராததோடு அவற்றை இரசிக்கும் வண்ணம் தரப்பட்டுள்ளது....
ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகப் பிழைக்க முயலும் டக்ளசை இருவரும் ஏமாற்றுகிறார்கள், பணம் பறிக்கிறார்கள். இதிலும் ஒரு கிராமத்து அப்பாவியை ஏமாற்றுவதாக இரசிகர்கள் உணர்வதில்லை. கவுண்டமமணி பாணியிலான இந்த காமெடி பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்கான அரதப் பழசான உத்தி. நிஜ வாழ்வில் இப்படி அரட்டி மிரட்டி ஏமாற்றிப் பிழைக்கும் பேர்வழிகளை மக்கள் வெறுக்கிறார்கள். யதார்த்ததிற்காக போற்றப்படும் இந்தப் படத்தின் இலட்சணம் இது தான்....
இப்படி எல்லா சினிமாத்தனங்களும் செயற்கையான பாத்திரப் படைப்பும் கொண்டு நகைச்சுவையின் உதவியுடன் நேர்த்தியாகப் பின்னப்பட்ட சராசரி மசாலாதான் பருத்திவீரன்…….
இந்த யதார்த்தம் போலியானது. படத்தில் வழக்கு மொழி,உடலசைவு காட்சிகளன்கள், நாட்டுப்புறக் கலைகளில் மண்வாசனை அடித்தாலும், கதையில், உண்மையான கிராமம் இல்லை. உண்மயான கிராமம் இங்கே கேலி செய்யப்படுகிறது. தேவர் சாதியினர் ஆதிக்கம் செய்யும் கிராமத்தில் குறத்து பெண்ணொருத்தி சாராயம் காய்ச்சி ராச்சியம் செய்கிறாள். தொழில் போட்டிக்கு வரும் ஆதிக்கசாதி நபர்களை தன்னந்தனியாய் நின்று கொலை செய்கிறாள். இத்தகைய கிராமத்தை எங்காவது கேள்விப்பட்ட்ருக்கிறீர்களா?......
பருத்திவிரனைப் போன்ற இரவுடிகள், பணக்காரர்கள், பண்ணையார்களுக்கு எடுபிடி சேவகம் செய்து பிழைப்பார்கள். அடிமைகளுக்கு சுயேச்சையான, கலகலப்பான வாழ்வு இருக்க முடியுமா என்ன? பருத்திவீரன் உள்ளூரில் மட்டும் சண்டித்தனம் செய்வதால் ஊர் சுற்றி வம்பலப்பதற்கு நேரம் இருக்கிறது. அவன் விரும்பியபடி சென்னை ஜெயிலுக்கு போகுமளவுக்கு பெரிய ரவுடியாக இருந்தால்....போலீசு போடுமா, எதிரி போடுவானா என அச்சத்தில் வாழ வேண்டியிருக்கும்....
வேலை வெட்டிக்கு போகாமல் பெண்களின் காசில் குடித்து விட்டு ஊர் சுற்றும் கிராமப்புறத்தின் எச்சங்கள் தான் பருத்திவீரன் போன்ற அழுக்குகள். இந்த அழுக்கையே அலங்காரமாய், அழகாய், கலகலப்பாக காட்டுகிறார் இயக்குநர். இதை எவ்விதச் சுரணையுமின்றி இரசிக்கும் இரசணை தான் நமக்கு நெருடலைத் தருகிறது.
இந்த பொறுக்கிவீரன் தங்களை கேலி செய்வதாக சாதாரண உழைப்பாளி மக்கள் முதல் படிப்பாளி இரசிகர்கள் வரை யாருமே உணர்வது இல்லை.
ஒரு திரைப்படத்தின் நாயகன் விவசாயியாகவோ, தொழிளாலியாகவோ தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவன் நிலப்பிரபுவாகவோ, காமவெறி பிடித்த மிருகமாகவோ கூட இருக்கலாம். அவன் வாழ்க்கையை எப்படி பார்க்க பழக்குகிறார் என்பது தான் பிரச்சனை. ஒரு சொறி நாயின் அழகை இரசிக்க கற்று கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
நன்றி - புதிய கலாச்சாரம் மே 2007
நன்றி: சுனா பானா
5 comments:
நன்றி புத்தகப்ரியன்!! அப்படியே அப்படத்தினை பற்றிய எனது எண்ணங்களை இப்பதிவு பிரதிபலிக்கிறது.
உங்களின் மாறுப்பட்ட பார்வை சிந்திக்க வைக்கிறது.
நன்றி. மயிலாடுதுறை சிவா...
புத்தக பிரியனின் வித்தியாசமான ரசனை என்னை கவர்ந்துள்ளது.
அதாவது ஒரு வணிக நோக்குடன் தயாரிக்கப்படும் படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது நம் தமிழ்படங்களில் முத்திரை குத்தப்பட்டுள்ளது. அதற்கு உதாரணம் பல படங்கள்.
இவ்வாறு இருக்கும் நிலையில் ஒரு கிராமத்தின் மண்வாசனையில் ஒரு யதார்த்தமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் அமீர். அப்படத்தில் உள்ள சங்கதிகள் பலவற்றை நேரில் நான் பார்த்திருக்கிறேன். அப்படத்தில் எந்த ஒரு காட்சியும் திணிக்கப்பட்டவையாகத் தோன்றவில்லை. மதுரை கிராமத்து மக்களுக்கே உரிய குணங்களுடன் அனைத்து பாத்திரங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் வரும் யதார்த்தமான பல காட்சிகளை ரசிக்காமல் இருக்க முடியாது.
தமிழ் சினிமாவை உலகதரத்திற்கு எடுத்துசெல்லும் ஒரு சில இயக்குநர்களில் அமீரும் ஒருவர் என்பதற்கு அவரின் ராம் மற்றும் பருத்திவீரன் படங்கள் ஒரு உதாரணம்.
உங்களது இதுபோன்ற உள்ளார்ந்த விமர்சனங்கள் ஏன் மற்ற படங்களை சாடுவதில்லை...சமீபத்தில் வெளியான விசய் அசித் நடித்த பல உப்புமா படங்கள் உங்களை பாதிக்கவில்லையா?
வித்தியாசமான கோணம். பலவிதங்களில் சரியானதும்கூட.
களமும், உரையாடலும் மட்டுமே எதார்த்தமல்ல என்பதை ஒப்புக்கொள்கிறேன். சொல்லப்போனால் சினிமாக்களில் எதார்த்தம் ஒரு செயற்கையாக 'உருவாக்கப்பட்டதாகவே' உள்ளது.
ஆனால் நகைச்சுவை/நையாண்டி செய்துகொண்டே சண்டித்தனம் செய்யும் ரவுடிகள் நிச்சயம் உண்டு.
கிராமங்களை காட்சியில் வைத்து படம் செய்பவர்களை வெறுமனே அதற்காகவாவது பாராட்டலாம்.
அருமையான அலசல்.
சினிமாவில் "இயற்கையான " வாழ்வை மறைத்து, "செயற்கையான வாழ்வை" யதார்த்தம் என்ற பெயரில் திணிக்கும் படங்களில் இப்படமும் ஒன்று.
கதாநாயகன் காட்டுதனமாய் கத்தி, போலீஸின் காதை அறுத்து, பறந்து மல்யுத்தம் செய்து, திருநங்கைகளை இழிவுபடுத்தி, விபசாரிகளுடன் உல்லாச வாழ்வு வாழ்த்து, அவனையும் ஒரு பெண் துரத்தி துரத்தி காதல் செய்வதுதான் தமிழ் சினிமாவின் யதார்த்தம்
Post a Comment