1871 மார்ச் 18ந் தேதியன்று பாரிஸ் தொழிலாளர்கள் முதலாளி வர்க்க ஆட்சியாளர்களை அந்த நகரத்திலிருந்து வெளியே விரட்டிய பிறகு ஆட்சியதிகாரத்தைத் தாங்களே எடுத்துக் கொண்டார்கள். அது என்றைக்குமே மறக்க முடியாத ஒளிமிகுந்த சாதனையாகும்.
..
பத்து நாட்களுக்குப் பிறகு, மார்ச் 28ந் தேதியன்று உலகத்தின் முதல் பாட்டாளி வர்க்க அரசாகிய பாரிஸ் கம்யூனை அவர்கள் நிறுவினார்கள். அது முற்றிலும் புதிய ரகத்தைச் சேர்ந்தது. மக்களுக்காக மக்களால் நிர்வகிக்கப்படுவது. அதன் எல்லா சமூக, அரசியல் நடவடிக்கைகளுமே உழைக்கும் மக்களின் - எல்லாவற்றுக்கும் மேலாகத் தொழிலாளி வர்க்கத்தின் - நலன்களுக்காக எடுக்கப்பட்டன.
கம்யூன் 72 நாட்கள் இருந்த பிறகு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிற்போக்கு சக்திகளின் தாக்குதலை வீரமாக எதிர்த்த பிறகு வீழ்ச்சியடைந்தது. ஆனால் அதன் அனுபவமும் படிப்பினைகளும் உலகப் புரட்சிகர இயக்கத்தின் மீது மாபெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தன.
பாரிஸ் புரட்சி உலக முழுவதிலும் உணர்ச்சிகரமான எதிரொலியையும் பலமான சர்வதேச ஒருமைப்பாட்டு இயக்கத்தையும் ஏற்படுத்தியது. 1871ம் வருடத்தின் வசந்த காலத்திலும் கோடை காலத்திலும் கம்யூனை ஆதரித்தும் அதை நசுக்கியவர்கள் செய்த கொடுமைகளை எதிர்த்தும், தப்பி வந்த கம்யூனிவாதிகளை ஆதரித்தும் பிரிட்டன், ஜெர்மனி, பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் தொழிலாளர்கள் மாபெரும் பொதுக் கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள்.
விஞ்ஞான கம்யூனிசத்தின் மூலவர்களான கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் தலைமை தாங்கிய உலகத்தின் முதல் வெகுஜனப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்க அமைப்பாகிய சர்வதேசத் தொழிலாளர் சங்கம் - முதலாம் அகிலம் - இந்த இயக்கத்தை நடத்தியது.
பாரிசில் நடைபெற்ற சம்பவங்களை மார்க்சும் எங்கெல்சும் நுணுக்கமாக கவனித்தார்கள். கம்யூனுடைய தலைவர்கலோடு நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டதோடு அவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்தார்கள். கம்யூன் வீழ்ச்சியடைந்த பொழுது வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடி வந்த கம்யூன் வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவி செய்வதற்கும் இயக்கம் நடத்தினார்கள்.
மார்க்சும் எங்கெல்சும் தங்களுடைய எழுத்துக்களிலும் கடிதங்களிலும் பாரிஸ் கம்யூன் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சிகளை நுணுக்கமாக ஆராய்ந்தார்கள், பாட்டளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு உலகின் முதல் முயற்சி என்ற விதத்தில் அதன் சாரத்தை எடுத்துக்காட்டினார்கள்.
இந்தப் புரட்சியின் மூலம் மார்க்ஸ் தனது தத்துவத்தின் நடைமுறையை மறுபரிசீலனை செய்து 1872 ஜீன் 24 தேதியில் வெளிவந்த "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை" யின் முன்னுரையில் "இனிமேல் பாட்டாளிவர்க்கம் நிலவுகின்ற முதலாளித்துவ அரசை அப்படியே கைப்பற்றி உபயோகிக்க முடியாது. இதனை தகர்த்து எறிந்து விட்டு தங்களுக்கான அரசை தாங்களே நிறுவ வேண்டும்" என்று முடிவு செய்கிறார்.
இந்நூலில் பாரிஸ் கம்யூனைப் பற்றி மார்க்சும் எங்கெல்சும் எழுதிய கட்டுரைகள், வேண்டுகோள்கள், தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அதிகார பூர்வமான ஆவணங்கள், சொற்பொழிவுகள், பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த அறிக்கைகள், கடிதங்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன.
.
கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்
.
வெளியீடு
.
முன்னேற்றப் பதிப்பகம்,
முன்னேற்றப் பதிப்பகம்,
.
மாஸ்கோ
No comments:
Post a Comment